கனடாவில் முதியவர்களைக் குறிவைக்கும் நிதி மோசடிகள்
கனடாவில் முதியவர்களுக்கு எதிரான நிதி மோசடிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதாக 'ஆங்கஸ் ரீட் இன்ஸ்டிடியூட்' வெளியிட்டுள்ள புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் 645 மில்லியன் டொலர்களாக இருந்த மோசடி இழப்பு, கடந்த ஆண்டில் 704 மில்லியன் டொலர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது என கனடிய மோசடி எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால், ஒட்டுமொத்தமாக 2.4 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை மக்களிடமிருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவீதத்தினர் மட்டுமே அதிகாரிகளிடம் புகார் அளிப்பதால், உண்மையான இழப்புத் தொகை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
18 முதல் 29 வயதுடைய இளைஞர்களை விட, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மோசடிகளுக்கு ஆளாகும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
கனடாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றுவது இதற்கு முக்கிய காரணமாகும்.
அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், பல சந்தர்ப்பங்களில் குடும்ப உறுப்பினர்களே இத்தகைய நிதிச் சுரண்டல்களில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.