வவுனியா பகுதியில் முட்டி ஒன்றினுள் கைக்குண்டுகள்
முட்டிக்குள் இருந்து 30 கைக்குண்டுகள் மீட்பு - பூவரசங்குளம் பகுதியில் மேலதிக சோதனையை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை
வவுனியா- பூவரசங்குளம் பகுதியிலுள்ள தோட்ட காணியில், 30 கைக்குண்டுகள் அடங்கிய முட்டியொன்றினை பூவரசங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பூவரசங்குளம் செங்கல்படை பகுதியிலுள்ள தனியார் தோட்ட காணியை, அதன் உரிமையாளர் உழவியந்திரம் ஊடாக பண்படுத்தியுள்ளார், இதன்போது முட்டி ஒன்றினுள் கைக்குண்டுகள் இருப்பதை அவர் அவதானித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், முட்டி ஒன்றிற்குள் இருந்த 30 கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில், வெடிபொருட்கள் மண்ணிலும் புதையுண்டு இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த பகுதியினை, இன்று சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில், விடுதலை புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
