புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்காத போப் ஆண்டவர்
வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை என கூறப்படுகின்றது.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 84), கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் நேற்று மாலை வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை.
அதன் காரணமாக புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனையிலும் அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்தார்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் ‘சியாட்டிகா’ என்ற பிரச்சினையால் முதுகு, கால் வலியால் கடந்த காலத்திலும் அவதியுற்றிருக்கிறார் .
புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்காவிடினும், அவர் அப்போஸ்தலிக் அரண்மனை நூலகத்தில் தோன்றி புத்தாண்டு ஆசி வழங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.