அவர் பார்க்க மாமா மாதிரி இருந்ததால் கொன்றுவிட்டேன் ; அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் கொலை
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
டெக்சாஸின் ஆஸ்டின் நகரில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது மற்றொரு இந்தியரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இறந்தவர் அக்ஷய் குப்தா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலை வழக்கு
சுகாதார தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் அக்ஷய் குப்தா, மே 14 ஆம் தேதி ஆஸ்டினில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, தீபக் கண்டேல் என்ற மற்றொரு இந்தியர் திடீரென அவரை கத்தியால் தாக்கினார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த அக்ஷய் குப்தா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தனர்.
அக்ஷய் குப்தாவிற்கும் குற்றம் சாட்டப்பட்ட தீபக் கண்டேலுக்கும் இடையே எந்த மோதலோ அல்லது வாக்குவாதமோ இல்லை என்பதை சிசிடிவி காட்சிகள் தெளிவுபடுத்தின. காட்சிகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட கண்டேல் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட தீபக் கண்டேல் கூறிய காரணம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
பொலிஸாரின் விசாரணையில், அக்ஷய் குப்தா தனது மாமாவைப் போலவே இருப்பதாகவும், அதனால்தான் அவரைக் குத்திக் கொன்றதாகவும் கண்டேல் தெரிவித்தார்.