பூமியில் விழும் ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் சோதனை வெற்றி!!
பூமியில் விழும் ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் சோதனையில் தனியார் விண்வெளி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
சர்வதேச அளவில் தனியார் விண்வெளி நிறுவனங்கள் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் பல புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் உலகில் முதல் முறையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை அந்த நிறுவனம் வடிவமைத்து சாதனை படைத்தது. பொதுவாக விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளின் ஒரு பகுதி விண்ணுக்கு சென்றதும் மற்றொரு பகுதி பூமியில் விழுந்துவிடும்.
எனவே அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் வகை ராக்கெட்டுகள் விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் பத்திரமாக பூமியில் தரையிறங்க கூடியவை.
பல தனியார் விண்வெளி நிறுவனங்களும் இதுபோன்ற ராக்கெட்டுகளை உருவாக்க முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ராக்கெட் லேப் என்கிற தனியார் விண்வெளி நிறுவனம் பூமியை நோக்கி விழும் ராக்கெட்டை நடுவானில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது.
நியூசிலாந்தில் உள்ள மஹியா தீபகற்பத்தில் இருந்து ராக்கெட் லேப் நிறுவனத்தின் எலக்ட்ரான் ராக்கெட் 34 செயற்கைக்கோள்களுடன் விண்ணுக்கு புறப்பட்டது. அதன் பின்னர் ராக்கெட்டின் ‘பூஸ்டர்’ பகுதி பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ராக்கெட்டை பிடிக்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.
அப்போது அந்த ராக்கெட்டின் பாராசூட் மீது ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கொக்கி ஒன்று வீசப்பட்டு, பாராசூட் அப்படியே கப்பென்று பிடிக்கப்பட்டது.
எனினும் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் பிடியில் ராக்கெட் விடுவிக்கப்பட்டு, அது கடலில் விழுந்தது.
இருப்பினும் ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் பிடிக்கும் முதல் முயற்சி வெற்றிப்பெற்றதாக ராக்கெட் லேப் நிறுவனம் அறிவித்துள்ளது.

