6 நாட்களாக மருத்துவமனை வாசலில் உரிமையாளருக்காக காத்திருந்த நாய்!
துருக்கி நாட்டில் உரிமையாளர் வருகைக்காக வளர்ப்பு நாய் ஒன்று 6 நாட்களாக மருத்துவமனை வாசலில் காத்திருந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டின் வடகிழக்கே டிராப்ஜன் நகரில் வசித்து வருபவர் சிமல் சென்டர்க் (வயது 68). இவர் போன்கக் என்ற பெயரிடப்பட்ட சிறிய, கலப்பின வகையை சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 14ந்தேதி சென்டர்க் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை கொண்டு செல்லும்பொழுது ஆம்புலன்ஸ் பின்னாலேயே போன்கக் தொடர்ந்து சென்றுள்ளது. இதன்பின் அவரது வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்தது. ஆனால், அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை. அவருக்கு 6 நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்து உள்ளது.
ஒவ்வொரு நாளும் காலையில் மருத்துவமனைக்கு வெளியே வாசலில் நின்று கொண்டு தனது உரிமையாளரை காண ஆவலுடன் காத்திருந்துள்ளது. சென்டர்க்கின் மகள் பலமுறை போன்கக்கை வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார். ஆனால், அது மீண்டும் மருத்துவமனைக்கு ஓடி விடும் என அவர் கூறியுள்ளார்.
அதனை மருத்துவமனை ஊழியர்கள் துரத்தினாலும் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை.
அந்த மருத்துவமனையின் இயக்குனர் புவாட் உகுர் கூறும்பொழுது, யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படுத்தவில்லை.
ஒவ்வொருவருக்கும் அது மகிழ்ச்சி ஏற்படுத்தியது என தெரிவித்து உள்ளார். இதன்பின்பு சிகிச்சை முடிந்து சென்டர்க் வரும்பொழுது, அவரை கண்ட ஆவலில் தனது வாலை ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
மனிதர்களை போன்று எங்களுடன் நெருங்கியுள்ளது. உங்களை அது மகிழ்ச்சிப்படுத்தும் என சென்டர்க் கூறியுள்ளார்.