கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஐஸ் கிரீம் இலவசம்; அறிவித்த நாடு
ரக்ஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் உள்ள மாலில், கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு ஐஸ்கிரீம் இலவசம் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக புளும்பெர்க் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால், 2020ம் ஆண்டில் சர்வதேச நாடுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. இந்த தொற்றில் இருந்து விடுபடும் பொருட்டு, தடுப்பூசி முகாம்களை அதிகளவில் நடத்தி வருகின்றன.
எனினும், மக்களுக்கு இந்த தடுப்பூசியின் மீது போதிய நம்பிக்கை ஏற்படாததால்,தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தயக்கத்தை போக்குவதற்கும், தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தின் மால் ஒன்றில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, ஐஸ்கிரீம் இலவசம் என்ற அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக புளும்பெர்க் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புளும்பெர்க் பத்திரிகைக்கு தடுப்பூசி திட்டத்தின் தலைமை மருத்துவர் நடால்யா குஜென்டோவா அளித்துள்ள பேட்டியில், நாள் ஒன்றுக்கு குறைந்தது 300 பேருக்கு இந்த தடுப்பூசி போட திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று மட்டும் வெறும் 35 பேர் மட்டுமே வந்து இருந்தனர்.
ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் V அதிகம் போடும் நகரங்களில் மாஸ்கோ இருந்தபோதிலும், லண்டன், நியூயார்க் நகரங்களை ஒப்பிடும்போது, மாஸ்கோ, மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. ரஷ்ய மக்கள் தொகையில், 38 சதவீதத்தினர் மட்டுமே, இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.
மக்கள் அதிகளவில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாள் ஒன்றுக்கு 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் அளவிலான மாபெரும் தடுப்பூசி திட்டம், விரைவில் துவக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.