பிரிட்டன் எல்லையில் இப்படியா! குடியேறிகள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்
பிரிட்டனுக்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேறிகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறு படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சட்டவிரோதக் குடியேறிகள் பிரிட்டனுக்குள் நுழைகின்றனர்.
இந்நிலையில் பிரபல புலனாய்வு பத்திரிகையாளர் சூ ரீட் (Sue Reid) நடத்திய ஆய்வில், பிரிட்டன் துறைமுகங்களுக்கு வரும் அகதிகள் வெறும் 30 நிமிடப் பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லைப் பாதுகாப்பு என்பது நாட்டின் இறையாண்மை
முறையான ஆவணங்கள் மற்றும் பின்னணி சோதனைகள் இன்றி இவ்வளவு விரைவாக அவர்கள் அனுமதிக்கப்படுவது நாட்டின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுவாகப் புகலிடம் கோரி வருபவர்களிடம் தீவிர விசாரணை மற்றும் பயோமெட்ரிக் சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், தற்போது துறைமுகங்களில் நிலவும் அதிகப்படியான கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி, பெயரளவிலான சோதனைகளுடன் அவர்கள் பிரிட்டிஷ் மண்ணில் காலடி வைக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
பாதுகாப்பு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன" என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முறையான கண்காணிப்பு இல்லாததால், சர்வதேசக் குற்றப் பின்னணி கொண்டவர்கள் கூட எளிதாக நாட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அந்தப் புலனாய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் உள்துறை அமைச்சகத்தின் மெத்தனப் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளன. "எல்லைப் பாதுகாப்பு என்பது நாட்டின் இறையாண்மை தொடர்பானது; அதில் சமரசம் செய்துகொள்வது ஆபத்தானது" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம், மனிதாபிமான அடிப்படையில் வருபவர்களைத் தடுத்து நிறுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை அரசு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் பிரிட்டனுக்குள் சிறு படகுகள் மூலம் வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
முறையான பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தாவிட்டால், இது சமூக அமைதியைப் பாதிக்கக்கூடும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.