சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசம் ; சர்வதேச உதவி கோரும் மகன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் கண்பார்வை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகக் கூறி, அவரது மகன் காசிம் கான் சர்வதேச நாடுகளிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
73 வயதான இம்ரான் கான், 1,100 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நிலையில், அவருக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

பல வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இம்ரான் கான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு அவரை நேரில் சந்திப்பதற்கும் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எனது தந்தைக்கு உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.
ஆனால், பாகிஸ்தான் அரசு அவருக்கு உரிய சிகிச்சையை வழங்க மறுத்து வருகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற தேவையான மருத்துவ வசதிகளை வழங்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என காசிம் கான் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பில் அவரது மகன் விடுத்துள்ள கோரிக்கை தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.