நாட்டில் கலவரத்தை தூண்டினாரா? முன்னாள் ஜனாதிபதியின் மகள் கைது
ஈரானில் கலவரத்தை தூண்டியதாக முன்னாள் ஜனாதிபதியின் மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாக ஹிஜாப் உடைக்கு எதிரான போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டங்களை ஒடுக்க ஈரான் பாதுகாப்புப் படை தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இருப்பினும், நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் போராட்டத்தை தூண்டியதாக கூறி முன்னாள் ஜனாதிபதி அலி அக்பர் ஹாஷிமியின் மகள் ஃபாசியா ஹாஷிமி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஃபாசியா மீது முன்னரே பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் அரசை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார் என்றும், நபிகள் நாயகத்தை அவமதித்தாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனிடையே போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரானில் 80க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.