பாதுகாப்பிற்காக இஸ்ரேல் எதையும் செய்யும் – நெதன்யாகு!
ஒப்பந்தங்கள் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகச்சிறந்த நண்பர் என நெதன்யாகு புகழாரம் சூட்டியுள்ளார்.
எனினும் இஸ்ரேலின் இருப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நவீன சீயோனிச அமைப்பின் நிறுவனரான தியோடோர் ஹெர்ஸலின் தாத்தா மற்றும் பாட்டியான ஷிமோன் மற்றும் ரிவ்கா ஹெர்ஸலின் உடல்கள் ஜெருசலேமிலுள்ள ஹெர்ஸல் மலையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்ட அரசு சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நெதன்யாகு இதனைத் தெரிவித்தார்.
இத்தாலியின் ரோம் நகரில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கிடையே "கட்டமைப்பு ஒப்பந்தம்" குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும் சூழலிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை நடத்தி வரும் பின்னணியில் நெதன்யாகுவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.