இஸ்ரேலில் சுதந்திர தினத்தில் இடம்பெற்ற கொடூரம்!
இஸ்ரேலின் 74வது சுதந்திர தினம் நேற்று (மே 6) நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுதந்திரம் கொண்டாடப்பட்ட நிலையில், அந்நாட்டின் எலட் நகரில் உள்ள பூங்காவில் நேற்று இரவு சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது.
கொண்டாட்டங்கள் நிறைவடைந்த சமயத்தில் அந்த பூங்காவிற்கு காரில் வந்த 2 பயங்கரவாதிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, கோடாரியை கொண்டு பூங்காவில் இருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் 2 பேரும் உடனடியாக அங்கிருந்து காரில் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேவேளை இந்த தாக்குதலை பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சமீப காலமாக இஸ்ரேலியர்களை குறிவைத்து இஸ்ரேலில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இஸ்ரேலில் வசித்துவரும் அரேபியர்கள் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனை, மேற்குகரையில் உள்ளர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 16 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு பதிலடியாக காசா முனை, மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.