இந்தியாவை இறுதி வரையும் மரண பயத்தில் வைத்திருந்த ஆப்கானிஸ்தான் அணி!
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இறுதி டி20 போட்டியை இந்தியா வென்று 3-0 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இன்றைய தினம் பெங்களூரில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட்ட முடிவு செய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்கள் குவித்தது.
துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணி தலைவர் ரோஹித் சர்மா 121 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 69 ஓட்டங்களை எடுத்தனர்.
இதையடுத்து, 213 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இறுதியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ஓட்டங்களை எடுத்தது. இதன் மூலம் ஆட்டம் 'டை' ஆனது.
இதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 1 ஓவரில் ( 6 பந்துகள்) ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்களை குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 1 ஓவரில் 16 ஓட்டங்கள் எடுத்தது. இதனால், சூப்பர் ஓவரும் டை ஆனது. இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்க 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 2வது சூப்பர் ஓவரில் 11 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, 6 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் முதல் 3 பந்துகளில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால், ஆப்கானிஸ்தானை 2வது சூப்பர் ஓவரில் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.