பழிக்குப் பழி நடவடிக்கையாக கனேடிய தூதரை வெளியேற்றிய இந்தியா
கனடா, இந்தியாவுக்கிடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்ட, இப்போது, இரு நாடுகளின் தூதர்களும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்குச் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடாவில் காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துதல், தூதரக அதிகாரிகளுக்கெதிரான வன்முறை முதலான விடயங்கள் குறித்துப் பேச, கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நாடு திரும்பிய ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
அதைத்தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, கனடாவிலிருந்து வெளியேற கனடா உத்தரவிட்டது. கனடாவில் இந்திய உளவுத்துறை அமைப்பான Research and Analysis Wing (RAW)வின் தலைவரான Pavan Kumar Rai என்பவரே அந்த தூதரக அதிகாரி என கனடாவின் வெளியுறவு அமைச்சரான Mélanie Joly அலுவலகம் தெரிவித்துள்ளது.
கனடா இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனடா தூதரக அதிகாரி ஒருவரை இந்தியா வெளியேற்றியுள்ளது.
கனடாவின் மூத்த தூதரக அதிகாரியான, கனேடிய உளவுத்துறை ஏஜன்சியின் தலைவரான Olivier Sylvestere என்பவரே இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.