பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த இந்தியா ஏவுகணை: பதற்ற சம்பவம்
இந்தியாவின் ஏவுகணை ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக அண்டைய நாடான பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியதாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பரிசோதனைக்காக ஏவப்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணை (supersonic) ஒன்று கடந்த மார்ச் மாதம் 09-03-2022 ஆம் திகதி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
கடந்த 09-03-2022 திகதி அரியானா மாநிலம் சிர்சா பகுதியில் இருந்து ஏவப்பட்ட அதிவேக ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, மியா சானு என்ற பகுதியில் விழுந்திருப்பதாகவும், ஆய்வில் அது சூப்பர் சோனிக் வகை ஏவுகணை என்று தெரியவந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.
மேலும் இந்த ஏவுகணை விழுந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தனியார் சொத்துக்கள் சில சேதமாகியுள்ளதாகவும் கூறி பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்திய பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,
மார்ச் 09-03-2022ஆம் திகதியன்று வழக்கமான பராமரிப்பின்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் மண்ணில் தரையிறங்கி விட்டது.
இந்திய அரசு இதைத் தீவிரமாகக் கொண்டு உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. நடந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அந்த விபத்தில் நல்ல வேளையாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாதது நிம்மதியளிக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.