இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க இந்திய மத்திய அரசு அனுமதி
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக பிரதியமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பிரதியமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நீண்ட காலமாக உள்நாட்டு போர் நீடித்து வந்ததால், உயிர் பிழைக்கவும், வாழ்வாதாரம் தேடியும் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரி வருகிறார்கள்.
இதற்கு முதல்படியாக, கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் வந்த, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் கருணையுடன் அனுமதி அளித்துள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையால் நமது இலங்கை தமிழ் சொந்தங்கள், இனி சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
இதற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.