Texas இல் இந்தியத் தேசியக் கொடியைக் கிழித்து அவமதிப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி
அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் உள்ள ஃப்ரிஸ்கோ (Frisco) நகர மன்றக் கட்டடத்திற்கு முன்பாக, அமெரிக்க நபர் ஒருவர் இந்தியத் தேசியக் கொடியைக் கிழித்து தனது எதிர்ப்பை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃப்ரிஸ்கோ நகர பகுதியைச் சேர்ந்த அந்த உள்ளூர் நபர், வடக்கு டல்லாஸ் (North Dallas) பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இந்திய வம்சாவளியினரின் குடியேற்றத்தை ஒரு "குடியேற்றப் படையெடுப்பு" (Indian Immigration Invasion) என வர்ணித்துக் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியச் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி
நகர மன்றத்திற்கு முன்னால் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்பாக, தான் கொண்டு வந்திருந்த இந்தியத் தேசியக் கொடியை அவர் பகிரங்கமாகக் கிழித்து எறிந்துள்ளார்.
பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் மிக வேகமான மக்கள் தொகை மாற்றம் மற்றும் உள்ளூர் வளங்களில் ஏற்படும் தாக்கம் குறித்தே தான் இவ்வாறு தீவிரமாக எதிர்ப்பை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெக்சாஸின் ஃப்ரிஸ்கோ மற்றும் டல்லாஸ் போன்ற பகுதிகள் தகவல் தொழில்நுட்ப (IT) துறையின் வளர்ச்சி காரணமாக, பெருமளவிலான குடியேறிகளை ஈர்த்து வரும் நிலையில், இவ்வாறான தீவிர இனவாதப் போக்குடைய சம்பவங்கள் அங்கு வாழும் இந்தியச் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.