கனடா கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த 2022-ம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் திகதி, போலேவார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் 38 வயதான விஷால் வாலியா என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியபோது ஒரு வாகனத்திற்கு தீவைத்துவிட்டுச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், கொலையாளிகளான இக்பால் காங்க்(24), டீன்ரே பாப்டிஸ்ட்(21) மற்றும் பல்ராஜ் பஸ்ரா(25) ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இதில் இக்பால் காங்க் மற்றும் டீன்ரே பாப்டிஸ்ட் ஆகிய இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து இக்பால் காங்கிற்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், வானகத்திற்கு தீ வைத்த குற்றத்திற்காக கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மற்றொரு குற்றவாளி டீன்ரே பாப்டிஸ்டுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து இந்த வழக்கில் மூன்றாவதாக கைது செய்யப்பட்ட குற்றவாளியான இந்திய வம்சாவளி இளைஞர் பல்ராஜ் பஸ்ராவின் தண்டனை விவரங்களை பிரிட்டிஷ் கொலம்பியா கோர்ட்டு இன்று அறிவித்தது.
அதன்படி பல்ராஜ் பஸ்ராவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.