டிரம்பின் உத்தரவால் நாசாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ட்ரம்ப்பின் உத்தரவால் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரியான நீலா ராஜேந்திரா பணிநீக்கம் செய்யப்பட்டார்.
நாசாவின் பன்முகத்தன்மை சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார். இதற்கிடையே டி.இ.ஐ துறையை இரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீலா ராஜேந்திராவை தக்க வைத்து கொள்ள நாசா நடவடிக்கை எடுத்தது. அவரது பதவியை சிறப்பு குழுமற்றும் பணியாளர் வெற்றி அலுவலகத்தலைவர் என்று மாற்றியது.
ஆனால் இதை டிரம்ப் நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், நீலா ராஜேந்திராவை பணி நீக்கம் செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாசா தனது உயர்மட்ட விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீலா ராஜேந்திராவின் வெளியேற்றம் குறித்து மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நீலா ராஜேந்திரா பல ஆண்டுகளாக நாசாவில் தலைமைப்பொறுப்பில் இருந்தார். அவர் நாசாவை பன்முகப்படுத்த உதவும் முயற்சிகளுக்காக பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.