ஈரான் பதிலடியாக சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் - கனடா
ஈரான் மேற்கொள்ளக்கூடிய பதிலடி நடவடிக்கைகளில் சைபர் தாக்குதல்கள் “மிகவும் சாத்தியம்” என கனடாவின் டிஜிட்டல் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் ஆதரவு கொண்ட சைபர் செயற்பாட்டாளர்கள் ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு கனடாவின் முக்கிய உட்கட்டுமான வசதிகள் மற்றும் குறிவைக்கப்படக்கூடிய பிற நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு கனடா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளதால், ஈரான் ஆதரவு ஹாக்டிவிஸ்ட் குழுக்கள் கனடாவையும் குறிவைக்கக்கூடும்” எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை தொடங்கியதையடுத்து, ஈரான் இஸ்ரேலும் அதனுடன் இணைந்துள்ள அமெரிக்க கூட்டாளி நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளது.
கனடா நேரடி ஏவுகணை தாக்குதல்களுக்கு புவியியல் ரீதியாக அப்பால் இருந்தாலும், அரச ஆதரவு பெற்ற சைபர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் அபாயம் தொடர்ந்தும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஈரானின் பதிலடி நடவடிக்கைகளில் எரிசக்தி மின்பாதைகள், அரசு கணினி வலையமைப்புகள் மீது சைபர் தாக்குதல்கள் இடம்பெறலாம். அதேபோல் இராணுவத்தினரையும், வெளிநாடுகளில் வாழும் ஈரான் வம்சாவளி சமூகங்களையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும் ஆன்லைன் வழியாக தொந்தரவு செய்வதும் சாத்தியம் என கூறப்பட்டுள்ளது.
“பாதுகாப்பற்ற முக்கிய அடித்தள வலையமைப்புகள் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களை ஈரான் ஆதரவு சைபர் அச்சுறுத்தல் குழுக்கள் உலகம் முழுவதும் வாய்ப்பைப் பயன்படுத்தி குறிவைக்கின்றன. இதில் நீர் மற்றும் எரிசக்தி துறைகளும் அடங்கும்” என அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஈரான் ஆட்சிமாற்றத்தை வலியுறுத்தும் வெளிநாட்டு எதிர்ப்பாளர்கள் மீது ஈரான் சைபர் தாக்குதல்கள் நடத்தக்கூடும்” எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கனடா ஈரானின் முதன்மை இலக்காக இருக்க வாய்ப்பு குறைவாக இருந்தாலும், கனடாவின் முக்கிய அடித்தள கணினி வலையமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு குழுக்கள் அணுகல் பெற்றிருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.