மியான்மரில் இணைய சேவைகள் முடக்கம்; டுவிட்டர் நிறுவனம் கண்டனம்
மியான்மரில் இணைய சேவைகள் முடக்கத்திற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் ராணுவத்திற்கும் அந்த நாட்டு அரசிற்கும் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
அங்கு போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வரும் 7 தேதி வரை பேஸ்புக் பயன்பாட்டுக்கு மியான்மர் ராணுவம் தடை விதித்தது. இதன்படி அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு இணையதள சேவை வழங்குனர்களால், பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன இந்த சூழலில் டுவிட்டர் சேவையும் மியான்மரில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
முன்னதாக மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி லட்சக்கணக்கான பதிவுகள் டுவிட்டரில் வெளியாகி வந்தன.
இதுதொடர்பாக அந்நாட்டு தகவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணங்களில்,
“போலியான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முக்கிய கருவியாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நாட்டின் பொது நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு மறு அறிவுப்பு வரும் வரை டுவிட்டர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” என தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மியான்மரில் ஆங் சான் சூகி மற்றும் தலைவர்களை கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பின்னர், அங்கு தொடரும் இணைய சேவைகள் முடக்கத்திற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.