35 மில்லியன் டொலர் கடனாளியான 23 வயது கனேடிய இளைஞருக்கு கிடுக்குப் பிடி
கிரிப்டோ கிங் என தம்மை அடையாளப்படுத்தி வரும் ஒன்ராறியோ இளைஞர் ஒருவர் தமது முதலீட்டாளர்களுக்கு 35 மில்லியன் டோலர் கடனாளியான தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தொகையை அந்த இளைஞரிடம் இருந்து வசூலித்து தரும்படி தொடர்புடைய முதலீட்டாளர்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை 2 மில்லியன் டொலர் சொத்துகள் மட்டுமே அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
விட்பி பகுதியை சேர்ந்த 23 வயது Aiden Pleterski என்ற இளைஞரே அந்த கிரிப்டோ கிங். இவரிடம் சுமார் 150 முதலீட்டாளர்கள் 20 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞர் அந்த தொகையை கிரிப்டோகரன்ஸி மற்றும் வெளிநாட்டு பங்குச்சந்தைகளிலும் முதலீடு செய்துள்ளார். ஆனால் முதலீட்டாளர்களுக்கு உரிய பங்கை செலுத்தாமல், குறித்த இளைஞர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இவரிடம் 11 உயர்தர கார்கள், மாதம் சுமார் 45,000 டொலருக்கு பர்லிங்டனில் ஒரு சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். மட்டுமின்றி, $200,000 மற்றும் $400,000 மதிப்புள்ள ஐந்து அல்லது ஆறு கடிகாரங்கள் தனது கைவசம் வைத்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஆகஸ்ட் 9ம் திகதி, ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் பிளெட்டர்ஸ்கியையும் அவரது நிறுவனத்தையும் திவாலானதாக அறிவித்தது. மட்டுமின்றி, 2.2 மில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துகள் மட்டுமே அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
2015ல் இருந்தே கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்துவரும் இளைஞர் பிளெட்டர்ஸ்கி தமது முதலீட்டாளர்களுக்கு 5ல் இருந்து 7% வருவாய் ஈட்டித்தருவதாக உறுதி அளித்திருந்தார் என்றே கூறப்படுகிறது.
இதனால் சாதாரண மக்களும் 25,000 டொலர், 50,000 டொலர், 100,000 டொலர் என பிளெட்டர்ஸ்கியிடம் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.