போராட்டக்களமான ஈரான் ; உயிரிழப்பு 5,000-ஐ கடந்தது
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது.
இதன் காரணமாக அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் திகதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்நாட்டின் அனைத்து மாகாணங்களில் போராட்டம் பரவியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கமேனி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

மேலும், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் கமேனி தலைமையிலான ஈரான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கடவுளுக்கு எதிரானவர்கள் எனக்கூறி போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஈரானில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 500 பேர் பாதுகாப்புப்படையினர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ள நிலையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், போராட்டம், அரசின் ஒடுக்குமுறைகள் தொடர்பான தகவல்கள் பரவுவதை தடுக்க ஈரான் முழுவதும் இணையத்தள சேவையை அந்நாட்டு அரசு துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.