பட்டப்பகலில் ஈரானின் முக்கிய தளபதி படுகொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படைகளின் தளபதிகளில் ஒருவரான Sayad Khodai மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தளபதி Sayad Khodai குடியிருப்புக்கு வெளியே காரில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் எந்த குழுக்களும் பொறுப்பேற்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது. படுகொலைக்கு பின்னர் மாயமான துப்பாக்கிதாரிகள் இருவரையும் பொலிசார் தீவிரமான தேடி வருகின்றனர்.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையானது வெளிநாடுகளில் செயல்படும் உளவு அமைப்பாகும். IRGC என அழைக்கப்படும் இந்த அமைப்பானது பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதாகவும், மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் தாக்குதல்களுக்கு இந்த படை தான் காரணம் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
மேலும், உயர் பதவியில் இருக்கும் ஈரானியர்களை படுகொலை செய்வதை இஸ்ரேல் வாடிக்கையாக கொண்டுள்ளது என முன்னர் ஈரான் குற்றஞ்சாட்டி வந்துள்ளது.
மட்டுமின்றி, இஸ்ரேலிய உளவு அமைப்பின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியதால் பழி வாங்கியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
சமீப ஆண்டுகளில் கொல்லப்படும் IRGC அமைப்பின் இரண்டாவது மிகப்பெரிய தலைவர் Sayad Khodai என தெரியவந்துள்ளது.
2020ல் ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி ஈராக்கில் அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.