அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்கவில்லை ; ஈரான் ஊடகங்கள் தகவல்
அமெரிக்காவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஈரான் இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் 'தஸ்னிம்' செய்தி நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் அதிகாரிகள் இதுவரை உடன்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முக்கிய காரணங்களாக ஈரானின் கடல்சார் போக்குவரத்துத் தடைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அறிக்கைகள், அண்மைய செய்திக் பரிமாற்றங்களின் போது அமெரிக்கா முன்வைத்துள்ள அளவுக்கு அதிகமான கோரிக்கைகள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான இணக்கப்பாட்டை ஈரான் எட்டவில்லை என அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, போர் நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்படிக்கை ஒன்றை எட்ட ஈரான் தவறுமேயானால், அந்த நாட்டிற்கு எதிராக மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்தம் எதிர்வரும் வாரத்துடன் முடிவுக்கு வரவுள்ளது.
இதனை நீடிப்பதற்கு இரு நாடுகளும் உடன்படாவிட்டால், மீண்டும் ஒரு போர்ச் சூழல் உருவாகக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.