அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம்; FBI எச்சரிக்கை
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளை இலக்கு வைத்து ஈரான் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தக்கூடும் என ஃபெடரல் புலனாய்வுப் பணியகம் (FBI) எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும், அமெரிக்க மண்ணில் ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தக்கூடிய தாக்குதல்கள் குறித்து தான் கவலைப்படவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் குறித்து தான் கவலைப்படவில்லை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்ட நிலையில், பதிலடியாக ஈரான் பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
இந்தச் சூழலில், கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத கப்பலில் இருந்து ஈரான் ஆளில்லா வானூர்திகளை ஏவி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கலிபோர்னியா காவல்துறைக்கு FBI கடந்த மாதம் இரகசிய எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தத் தாக்குதல் எப்போது நடக்கும் அல்லது எதனை இலக்கு வைக்கும் என்பது குறித்த மேலதிகத் தகவல்கள் ஏதுமில்லை என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமின் (Gavin Newsom) அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய கிழக்கில் போர் தொடங்கியதில் இருந்தே கலிபோர்னியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து அவசரகால சேவைகள் பிரிவு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் மதிப்பீட்டின்படி, ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் அமெரிக்கா மீது ஒரு பெரிய அளவிலான நேரடித் தாக்குதல் நடைபெற வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகின்றது.