ஈரான் துறைமுக வெடிவிபத்து ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை
ஈரான் துறைமுக வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும்.
இதற்கிடையே, பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஈரான் துறைமுக வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான்-அமெரிக்கா, ஓமனில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில் பந்தர் அப்பாஸில் வெடிவிபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.