நடுக்கடலில் சிக்கிய ஆயிரக்கணக்கான கப்பல்கள் ; கடல்சார் உலகையே அதிரவைத்த ஈரான் நடவடிக்கை
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளதால், சுமார் 1,500 கப்பல்கள் மற்றும் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்து வருவதாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்த நிலையில், மேற்காசியாவின் முக்கிய கடல் வர்த்தக வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதுடன், பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டு வருகின்றன.
பனாமாவில் நடைபெற்ற அமெரிக்க நாடுகளின் கடல்சார் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்சனியோ டொமிங்குவேஸ், “ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் ஆயிரக்கணக்கான மாலுமிகள் கடலில் சிக்கியுள்ளனர்” என தெரிவித்தார்.
மேலும், “இதுவரை 30-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்களில் 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் சர்வதேச வர்த்தகத்தை முன்னெடுத்து செல்லும் சாதாரண பணியாளர்கள். அரசியல் மற்றும் போர் சூழ்நிலைகளின் விளைவால் அவர்கள் பாதிக்கப்படக் கூடாது” என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
நடுக்கடலில் சிக்கியுள்ள கப்பல்கள் மற்றும் மாலுமிகளை பாதுகாப்பாக மீட்க சர்வதேச நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச வர்த்தகத்துக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.