மத்திய கிழக்கில் மீண்டும் ஆரம்பமாகிறதா போர்? ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது மீண்டும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை (மே 8) பிற்பகல் வீசப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் தகர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்காத நிலையில், தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இன்று காலை ஹோர்முஸ் நீரிணையின் அருகில் உள்ள அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானிய ராணுவத்தின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்க படைகள் அறிவித்துள்ளன.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.
இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் போர்நிறுத்த அறிவிப்பின்படி இருதரப்பும் தங்களது தாக்குதல்களை நிறுத்தின.
ஆனால், பாகிஸ்தான் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.