இஸ்ரேல் - ஹமாஸ் போர்; பத்தாயிரத்தை அண்மிக்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி இன்று (30) 24 நாட்களாகின்ற நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் இதுவரை 8 ஆயிரத்து 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலை ஆரம்பித்துவைத்த ஹமாஸ்
அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 117 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதுடன் 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் குழுவினர் கடத்தி சென்றனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அதேவேளை, காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் போரை நிறுத்த உலக நாடுகள் வலியுறுத்திய போதும், அதனை காதுகொடுத்து கேட்காத இஸ்ரேலும் ஹமாஸும் போரை தொடர்ந்துகொண்டிருக்கின்றன.