பிறந்த குழந்தை உட்பட 30 பேர் கடலில் மூழ்கி பலி: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்
நூற்றுக்கும் அதிகமான புலம்பெயர் மக்களுடன் பயணித்த படகு ஒன்று உடைந்ததில் பச்சிளம் குழந்தை உட்பட 30 பேர் கடலில் மூழ்கி பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் தெற்கு கடற்கரை பகுதியில் கொந்தளிக்கும் கடலில் குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த இத்தாலிய மீட்புப்படையினர், இதுவரை 40 பேர்களை கணக்கிட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இறப்பு எண்ணிக்கை 30 கடந்துள்ளதாக Danilo Maida என்ற, தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தாலிய செய்தி முகமை AGI தெரிவிக்கையில், இறந்தவர்களில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை மற்றும் பல சிறார்களும் அடங்குவர் என குறிப்பிட்டுள்ளது.
இத்தாலிய உள்விவகார அமைச்சர் மேட்டியோ பியாண்டோசி தெரிவிக்கையில், துயரமான சம்பவம் இது, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
ஐரோப்பாவில் குடியேறினால் வாழ்க்கை தரம் மேம்படும் என கற்பனையான தோற்றத்தை கட்டமைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி இதுபோன்ற சிக்கலில் கொண்டுவிடும் குழுக்களை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த படகில் பயணித்த மக்கள் எந்த நாட்டவர்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும், அந்த படகு எங்கிருந்து புறப்பட்டது என்ற தகவலும் இல்லை. பொதுவாக கலாப்ரியா பகுதிக்கு வரும் புலம்பெயர்ந்த மக்களில் படகுகள் துருக்கிய அல்லது எகிப்திய கரையில் இருந்து புறப்படும் என்றே கூறப்படுகிறது.