அமெரிக்காவில் பெரும் மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை!
அமெரிக்காவில் ரூ.174 கோடி ரூபாய் மோசடி செய்த இந்திய வம்சாவளியான மினாள் படேலுக்கு 27 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் 44 வயதான இந்திய வம்சாவளியான மினாள் படேல் லேப் சொல்யூசன்ஸ் என்ற மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனமானது இடைத்தரகர்கள், கால்சென்டர் மற்றும் டெலிமெடிசின் நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ காப்பீட்டு பயனாளிகளை குறிவைத்து தொடர்பு கொண்டனர்.
அவர்கள் கேன்சர், மரபணு போன்ற பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட பிறகு டெலிமெடிசின் நிறுவனங்களிடம் இருந்து பெறும் மருத்துவ பரிசோதனை முடிவுகளில் மருத்துவர்களின் கையெழுத்தை பெற அவர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர்.
இந்த வகையில் கடந்த 2016-2019 காலகட்டத்தில் சுமார் ரூ.3,000 கோடி அளவிலான போலியான மருத்துவ பரிசோதனைகளை இந்த நிறுவனம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன்மூலம் சுமார் ரூ.174 கோடி வரை படேல் மோசடி செய்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜார்ஜியா மாகாண நீதி, மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் படேல் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் அவரது சொத்து பறிமுதல் வழக்கு வருகிற 25ம் திகதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.