கனடாவில் திறக்கப்பட்ட காலிஸ்தான் துாதரகம் ; வெடித்துள்ள புதிய சர்ச்சை
கனடாவின், சீக்கிய குருத்வாரா வளாகத்தில் 'காலிஸ்தான் துாதரகம்' திறக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் காலிஸ்தான் இயக்கம் ஒடுக்கப்பட்டதால், வட அமெரிக்க நாடான கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து அதன் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக கனடாவில் இந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
அரசியல் லாபம்
ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல், இந்தியர்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அரசியல் லாபத்துக்காக, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் கனடா அரசாங்கம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில், 'காலிஸ்தான் குடியரசு' என்று எழுதப்பட்ட பலகையுடன் கூடிய துாதரகம் ஒன்று, சர்ரே பகுதியில் உள்ள குருத்வாரா வளாகத்தின் ஒரு கட்டடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
துாதரகம் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதியில் கட்டப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.