கனடாவில் குடிவரவு சட்டத்தரணி என ஏமாற்றி மோசடி
கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில், தன்னை ஒரு குடிவரவு சட்டத்தரணி என்று பொய்யாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி 26-ஆம் திகதி கிச்சனர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
பாதிக்கப்பட்ட நபர், வேலைக்கான வீசா விண்ணப்பத்தைப் பெறுவதற்காக ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடியுள்ளார்.

இதற்காக 2024 மே மாதம் முதல் 2025 ஜூலை மாதம் வரை பல கட்டங்களாகப் பணம் செலுத்தியுள்ளார்.
ஆனால், நீண்ட நாட்களாகியும் எவ்வித விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை அறிந்த பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.
தேடப்படும் நபர் கிச்சனர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஹர்ஷரன் அலுவாலியா (Harsharan Ahluwalia) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்: 5,000 டொலர்களுக்கு குறைவான மோசடி (3 வழக்குகள்), ஆள்மாறாட்டம்/போலி அடையாளம் (3 வழக்குகள்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணையில், அலுவாலியா ஒரு பதிவுசெய்யப்பட்ட சட்டத்தரணி அல்ல என்பது உறுதியானது. இவர் 2025 மார்ச் மற்றும் 2026 ஜனவரி மாதங்களிலும் இதேபோன்ற குடிவரவு மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் பலர் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அல்லது இவரால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக வாட்டர்லூ பிராந்திய பொலிஸாரையோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' (Crime Stoppers) அமைப்பையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.