இஸ்ரேலிய தாக்குதல்களால் நிலைகுலைந்த லெபனான்
லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.
லெபனான் அரசாங்கத்தின் அனர்த்த மேலாண்மைப் பிரிவின் தகவல்படி, இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று இருமடங்காக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, கடந்த 48 மணிநேரத்திற்குள் 58,000 ற்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடித் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 50 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் உயர்மட்டத் தலைவரை அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுப் படைகள் படுகொலை செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இதற்குப் பதிலடியாகவே தாம் இந்தத் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் காரணமாக லெபனானின் தெற்குப் பகுதி மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறி வருவதால் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.