உயிரிழந்து 28 நிமிடங்களுக்கு பின் மீண்டும் உயிருடன் வந்த நபர்! அவர் பகிர்ந்த அனுபவம்
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பில் ஜிட்பெல் என்பவர் 28 நிமிடங்கள் மரணித்து, மீண்டும் உயிர் பெற்றுள்ள சம்பவம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பில் ஜிட்பெல் ஒரு தற்காப்பு கலைப் பயிற்சியாளர். இவர் டாக்ஸி ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு தன் மகனுடன் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து, இவரின் மகன் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனையில் பில்லை அனுமதித்தார். மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரின் இதயதுடிப்பு நின்றதையடுத்து, மருத்துவர்கள் இவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இருப்பினும், சரியாக 28 நிமிடங்கள் கழித்து, இவர் கண் விழித்தார். அப்போது தான் அவரின் இதய துடிப்பு நின்றதும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பில் ஜிட்பெல் தன் முழு அனுபவத்தையும் பகிர்ந்தார்.
அவர் கூறும் போது, “மக்கள் இறந்து மீண்டும் வந்த அனுபவங்கள் கூறியதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இறந்த பிறகு வெள்ளை ஒளியை பார்க்கிறார்கள், அல்லது கடவுள் தோன்றுகிறார்கள் என பல அனுபவங்களை பகிர்கிறார்கள்.
ஆனால் எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. எனது உடலில் இருந்து எனது ஆன்மா வெளியே வந்து பறக்க தொடங்கியது போல நான் உணர்ந்தேன்.
அப்போது என்னை உயிர்பிக்க செவிலியர் ஒருவர் முயற்சி செய்தார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது என்னுடைய நினைவில் இல்லை” என தெரிவித்தார்.
மேலும் “இத்தனை பேர் முன்னிலையில் எனக்கு மாரடைப்பு வந்தது அதிசயம் போல் உள்ளது. நான் இறக்க வேண்டும் என்றால் எனக்கு தூக்கத்தில் மாரடைப்பு வந்திருக்கலாம். அப்போது யாருக்கும் தெரியாமல் நான் இறந்திருக்கலாம்.
இதையடுத்து நான் கற்றுக்கொண்டது ஒன்றை மட்டும் தான். நாம் கவலைப்படும் சிறிய விஷயங்களைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை” என தெரிவித்தார்.
இறந்த பிறகு மீண்டும் வந்த அனுபவங்கள் குறித்து பலர் சொல்வதை செய்திகளாக உலகம் முழுவதும் நாம் படித்திருப்போம். அப்படி ஆஸ்திரேலியாவில் ஒருவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.