டொராண்டோவில் வெறுப்புணர்வைத் தூண்டிய வாலிபர் கைது!
கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் வாரயிறுதி நாளின்போது, பாலஸ்தீனியர்கள் என தவறாகக் கருதப்பட்ட சிலரை ஆயுதத்தைக் காட்டி மரண மிரட்டல் விடுத்த வழக்கில் டொராண்டோவைச் சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை வெறுப்புணர்ச்சியால் தூண்டப்பட்ட ஒரு குற்றச் செயலாக டொராண்டோ போலீசார் கருதுகின்றனர்.
கடந்த ஜூன் 5, 2026 அன்று, ஸ்கார்பரோவின் லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் பார்மசி அவென்யூ பகுதிக்கு அருகில் ஏதோ அசம்பாவிதம் நடப்பதாகத் டொராண்டோ போலீசாருக்கு அவசரத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொலிஸார் விசாரணை நடத்தியதில், அங்குள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த சிலரை 'பாலஸ்தீனியர்கள்' என நினைத்துக்கொண்டு அவர்களை நோக்கித் தீவிரமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், அந்தச் சந்தேக நபர் கையில் ஆபத்தான ஆயுதம் ஒன்றை வைத்திருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து டொராண்டோவைச் சேர்ந்த 32 வயதான ஷபிக் அல் ஜவ்ஹாரி என்ற வாலிபரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஷபிக் அல் ஜவ்ஹாரி மீது பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியமை, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் ஆயுதம் வைத்திருந்தமை, கொலை மிரட்டல் விடுத்தது, நன்னடத்தை விதியை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட அவர், ஜூன் 6 அன்று பிணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து புலனாய்வு செய்து வரும் போலீசார், இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அல்லது தகவல்கள் ஏதேனும் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக டொராண்டோ போலீசாரையோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பையோ தொடர்பு கொண்டு ரகசியமாகத் தகவல் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.