ஒன்ராறியோவில் ஹொட்டல் அறையில் ஆணின் சடலம்: வெளிவரும் பின்னணி
ஒன்ராறியோவின் போர்ட் ஹோப்பில் ஹொட்டல் அறைக்குள் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது.
சனிக்கிழமை இதே நபர் தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் விசாரணை முன்னெடுத்திருந்தனர். மே 24ம் திகதி சுமார் 4.15 மணியளவில் குறித்த ஹொட்டலுக்கு பொலிசார் சென்றுள்ளனர்.
அப்போது அங்குள்ள அறைகளில் ஒன்றில் தங்கியிருக்கும் நபர் ஒருவருடன் விவாதித்துள்ளனர். இதனிடையே அந்த நபர் அறைக் கதவை மூடிக்கொள்ளவும் பொலிசார் திரும்பியுள்ளனர்.
மீண்டும் உள்ளூர் பொலிசாரின் உதவியுடன் பிராந்திய பொலிசாரும் இணைந்து அந்த நபரை கைது செய்ய இரண்டாவது முறை சென்றுள்ளனர்.
ஆனால் அந்த நபர் பதிலளிக்க மறுத்ததுடன், கதவை திறக்கவும் இல்லை என்பதால், பொலிசார் ஏமாற்றமுடன் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பகல் சுமார் 10 மணிக்கு மூன்றாவது முறையாக குறித்த ஹொட்டலுக்கு சென்ற பொலிசார், வலுக்கட்டாயமாக குறித்த நபரின் அறைக்குள் நுழைந்துள்ளனர்.
ஆனால் அங்கே அந்த நபர் சடலமாக கிடந்துள்ளார். மர்மமான இந்த வழக்கு தொடர்பில் தற்போது சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.