புறப்படவிருந்த விமானத்தில் நேர்ந்த அசம்பாவிதம் ; எஞ்சினுக்குள் இழுக்கப்பட்டு நபர் ஒருவர் பலி
விமானத்தின் எஞ்சினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் நேற்று (8) வோலோடியா நிறுவனத்தின் எயார்பஸ் ஏ-319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது.
ஓடுதளத்திலிருந்து விமானம் புறப்படும் வேளை விமானத்தின் அருகே சென்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென விமானத்தின் இயந்திரத்திற்குள் உள்ளிழுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 35 வயதான பொதுமகன் என்று தெரிவிக்கப்படுகின்றது. விபத்தையடுத்து ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், விமான நிலைய நடவடிக்கைகள் சில மணி நேரம் நிறுத்தப்பட்டன.
மேலும் மிலன் பெர்கமோ விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் இத்தாலியின் மிலன் மல்பென்சா (MXP) விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையே குறித்த விமானத்தில் சிக்கி உயிரிழந்தது பயணியோ விமான ஊழியரோ அல்ல. 154 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று வோலோடியா விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.