46 மில்லியன் டொலர்... அமெரிக்கர் ஒருவரிடம் கைவரிசையை காட்டிய கனேடிய இளைஞர்
அமெரிக்காவில் 46 மில்லியன் டொலர் மதிப்பிலான cryptocurrency-ஐ ஒருவரிடம் இருந்து கொள்ளையிட்ட ஒன்ராறியோ இளைஞர் கைதாகியுள்ளார்.
குறித்த கைது சம்பவத்தை ஹாமில்டன் பொலிசார் புதன்கிழமை உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலனாய்வு அமைப்புடன் இந்த விவகாரம் தொடர்பில் மார்ச் 2020 முதல் ஹாமில்டன் பொலிசார் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
SIM swap முறையிலேயே குறித்த அமெரிக்கரை அந்த இளைஞர் சிக்க வைத்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட cryptocurrency மூலம் அரிதான சில பயனர் பெயர்களை அந்த ஒன்ராறியோ இளைஞர் இணையத்தில் வாங்கியுள்ளார்.
குறித்த பெயர்கள் இணையம் ஊடாக முன்னெடுக்கப்படும் விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் அரிதானவை என கூறப்படுகிறது. இந்த அரிதான பெயரை குறித்த இளைஞர் வாங்கிய நிலையிலேயே, விசாரணை அதிகாரிகளின் கவனம் அந்த இளைஞர் மீது திரும்பியுள்ளது.
ஹாமில்டன் பகுதியை சேர்ந்த அந்த இளைஞர் ஏற்கனவே 5,000 டொலர் அளவுக்கு திருட்டு வழக்கில் கைதாகியிருந்தார். மட்டுமின்றி, கனேடிய வரலாற்றில் ஒரு நபர் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்சி மோசடி இது என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் இளைஞர் என்பதால், அவரது எதிர்காலம் மற்றும் சட்டம் அளித்துள்ள பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அந்த நபரின் வயது, பெயர் உள்ளிட்ட தகவல்களை தற்போது வெளியிட முடியாது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
46 மில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி ஒருவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபடும் கனேடிய மக்கள் தங்கள் முதலீடு தொடர்பில் கவனமாக இருக்க பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இணையத்தில் 15 கணக்குகள் வரையில் பயன்பாட்டிற்கு ஒரே ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்தி வந்தால், நீங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் எனவும் ஹாமில்டன் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.