மகாராணியின் ஆன்மா சாந்தியடையட்டும்; சர்ச்சையை கிளப்பிய ட்விட்டர் பதிவு
இங்கிலாந்து மகாராணியின் ஆன்மா சாந்தியடையட்டும் என்ற போலித் தகவல் ட்விட்டரில் பகிர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ஜிங்கிலிருக்கும் Tiananmen என்ற பகுதியில் மாணவர்கள் ஜனநாயக சீர்திருத்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி சீன ராணுவத்தால் கலைக்கப்பட்டதில், சுமார் 200 க்கும் மேலானோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் பெய்ஜிங்கிலிருக்கும் இங்கிலாந்து தூதரகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் ராணுவ வீரர்களால் கலைக்கப்பட்ட மாணவர்களின் போராட்ட நாளை நினைவு கூறும் விதமாக மெழுகுவர்த்தி படத்தை வெளியிட்டுள்ளது. எனினும் 20 நிமிடங்களில் இந்த மெழுகுவர்த்தி படம் சீன சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டது.
இதனையடுத்து இங்கிலாந்தின் தூதரகத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மகாராணியின் ஆன்மா சாந்தியடையட்டும் என்ற போலித் தகவலை ட்விட்டரில் பலர் சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் பகிர்ந்த நிலையில் இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனினும் இந்த ட்விட்டர் பதிவை யார் செய்தார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.