இராணுவம், சுகாதார உதவிகளை உடனே அனுப்புங்கள்: பிரதமருக்கு வின்னிபெக் மேயர் கோரிக்கை
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் சந்திப்பை அடுத்து, மானிடோபாவில் இராணுவ மற்றும் சுகாதார உதவிகள் கோரி வின்னிபெக் மேயர் அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதால் வின்னிபெக் மேயர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
முன்னதாக பிரதமர் ட்ரூடோ வெள்ளிக்கிழமை காலை வின்னிபெக் மேயர் பிரையன் போமன் மற்றும் மானிடோபா முதல்வர் பிரையன் பாலிஸ்டர் ஆகியோருடன் தனித்தனியாக கலந்தாலோசித்துள்ளார்.
தற்போதைய சூழலில் கனேடிய ராணுவம் மற்றும் சுகாதார ஊழியர்கள் கண்டிப்பாக களமிறங்க வேண்டும் என பிரதமரிடம் தாம் அறிவுறுத்தியதாக மேயர் போமன் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணத்தில் அவசர சிகிச்சை பிரிவு தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்கள் கவலையை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே நிலை நீடிக்கும் என்றால் நான்கு நாட்களில் அவசர சிகிச்சை பிரிவுகளில் இடம் பற்றாக்குறை ஏற்படலாம், நோயாளிகளை ஒன்ராறியோவுக்கு அனுப்பும் சூழல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் ட்ரூடோ தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.