உளவியல் மருத்துவர்களை அதிகம் நாடும் கனேடிய இளம் தாய்மார்கள்
கனடாவில் உளவியல் மருத்துவர்களை நாடும் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காலங்களிலேயே இந்த எண்ணிக்கை அதிகரிப்பு நேர்ந்துள்ளது. மட்டுமின்றி கனடாவில், சமீபத்தில் தாயான பெண்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு அல்லது கவலைக் கோளாறு ஆகியவற்றுடன் ஒத்துப்போகும் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஓராண்டில், கொரோனா பரவல் புதிய தாய்மார்களுக்கு மனநல சவால்களை அதிகப்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி கொரோனா பரவலுக்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இளம் தாய்மார்களில் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு காரணமாக மருத்துவர்களை நாடும் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் மட்டும் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட 137,600 பேர் கண்டறியப்பட்டதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் உற்றார் உறவினர்களிடம் இருந்து போதிய கவனிப்பு இல்லாததே, பெரும்பாலான இளம் தாய்மார்கள் உளவியல் மருத்துவர்களை நாடும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பல தாய்மார்களுக்கும் தேவையான உதவிகள் கொரோனா நாட்களில் கிட்டாமல் போனதும் முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது.
2020 மார்ச் மாதம் மட்டும், பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வால் உளவியல் ஆலோசனை பெற்ற தாய்மார்களின் எண்ணிக்கை 46 சதவிகிதமாக இருந்தது, ஏப்ரல் மாதத்தில் 85 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
ஆனால் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் இது வெறும் 3 சதவிகிதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.