இராணுவ எச்சரிக்கையும் இராஜதந்திர முயற்சியும் ; அமெரிக்கா–ஈரான் உறவில் பதற்றம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் இராணுவ எச்சரிக்கைகளும், இராஜதந்திர முயற்சியும் ஒரே நேரத்தில் தொடர்வதால் மத்திய கிழக்கில் ஒரு தெளிவற்ற சூழல் நிலவி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்கா தன் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தால், அதற்குத் தக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரானின் இராணுவமும் புரட்சிகரக் காவல்படையும் எச்சரித்துள்ளன.

அரசியல் தலைமையைப் பொறுத்தவரை, இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளை முழுமையாக மூடாமலும், அதேவேளை முழுமையாகத் திறக்காமலும் கவனமான ஒரு நிலைப்பாட்டைக் கையாண்டு வருகிறது.
அமெரிக்காவுடனான எந்தவொரு பேச்சுவார்த்தை உடன்பாட்டிலும் தெஹ்ரானில் நிலவும் ஆழமான நம்பிக்கையின்மையே பெரும் தடையாக உள்ளது.
தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், அது எந்த நேரத்திலும் முறியப்படக்கூடிய பலவீனமான சூழலிலேயே உள்ளது.
இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் ஒரு வலுவான மோதல் அலை உருவாகக்கூடும் என்ற அச்சம் நீடிக்கிறது.
இந்தநிலையில்,ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுக் கோரிக்கைகள் போன்ற பிரச்சினைகள், இராஜதந்திரப் பாதையில் சுமுகமாகத் தீர்க்கப்படுமா அல்லது அடுத்தகட்ட மோதலுக்கு வழிவகுக்குமா என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.