மியான்மரில் மருத்துவப் பணியாளர்கள் மீது ராணுவம் தாக்குதல்
மியான்மரில் மருத்துவப் பணியாளர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எனினும் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசாங்கத்தை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது. மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது.
மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறது.
இதேவேளை மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 700க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.