உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ விமான ஹெலிகாப்டர் விபத்து!
பாகிஸ்தானில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவிலிருந்து உயர் அதிகாரிகளுடன் புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர், சில நிமிடங்களில் திடீரென மாயமானது.
சுமார் 5 மணி நேரமாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்திற்கான சிக்னல் கிடைக்கவில்லை என்ற நிலையில், ஹெலிகாப்டரில் 6 காமாண்டர்கள் பயணித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சர்ப்ராஸ் அலி, இரண்டு மேஜர்கள், பாகிஸ்தான் கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் பிரிகேடியர் அம்ஜத் ஹனிஃப் சத்தியும் விமானத்தில் இருந்ததாக பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.
பலுசிஸ்தானில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன், ஹெலிகாப்டர் தொடர்பை இழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இன்று ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதன்போது 6 நபர்கள் அந்த ஹெலிகாப்டரில் இருந்தனர் என்று பாகிஸ்தான் ஆயுதப் படையின் செய்தித் தொடர்பாளர் ட்வீட் செய்திருந்தார். ஹெலிகாப்டர் காணாமல் போனதும் தொடங்கிய மீட்பு நடவடிக்கைகள் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டு, தேடுதல் பணி இன்று காலை மீண்டும் தொடங்கும் என்று காவல்துறை அதிகாரி சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் நேற்று இரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை ஹெலிகாப்டர் விபத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ள மீட்புப் பணியின் போது பலுசிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் சர்ஃப்ராஸ் உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்துவிட்டனர். பேரிடர் மேலாண்மை அமைப்பின் கூற்றுப்படி, தெற்கு பாகிஸ்தானில் அசாதாரணமான பருவமழைக்குப் பிறகு, பிராந்தியத்தில் வெள்ளப் பாதிப்புகள் கடுமையாக உள்ளது.
வெள்ளம் மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரிடர்களின் போது, சிவில் நிர்வாகம் பாகிஸ்தானின் இராணுவத்தை பெரிதும் சார்ந்துள்ளது, ஏனெனில் அது நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாகும்.
பலுசிஸ்தானில் குறைந்தது 136 பேர் இறந்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக நிவாரணம் வழங்கச் சென்றவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.