வாகன திருட்டை தட்டிக்கேட்ட பொதுமக்கள்: கத்தியால் இளைஞரை தாக்கிய மூவர்
மிசிசாகா பகுதியில் இளைஞரை கத்தியால் தாக்கிவிட்டு மாயமான மூவர் கும்பலில் ஒருவரை கைது செய்துள்ளதாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எஞ்சிய இருவரையும் தொடர்ந்து தேடி வருவதாகவும் பீல் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் காயமடைந்த 21 வயது இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
ஏப்ரல் 28ம் திகதி ஹாரோ மற்றும் ஹல் பகுதியில் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதாக பீல் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், மூவர் கும்பல் ஒன்று வாகன திருட்டில் ஈடுபட்டதாகவும், அதை அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார், மே 14 அன்று இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளது.
எஞ்சிய இரு குற்றவாளிகளும் 18 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும், இந்த விவகாரம் குறித்து தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.