தடுப்பூசி கேட்ட கனடா பிரதமருக்கு மோடி கூறிய பதில்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கு கனடாவின் தடுப்பூசி முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என பிரதமர் மோடி கனடா பிரதமருக்கு உறுதியளித்தார்.
மோடியின் இந்த பதிலுக்கு தனது பாராட்டுகளை வெளிப்படுத்திய பிரதமர் ட்ரூடோ, உலகம் கொரோனாவை வீழ்த்த முடிந்தால், அது இந்தியாவின் மிகப்பெரிய மருந்து திறன் காரணமாகவும், இந்த திறனை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதில் பிரதமர் மோடியின் தலைமையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என கூறியதையடுத்து பிரதமர் மோடி ட்ரூடோவுக்கு நன்றி தெரிவித்தார்.
பல முக்கியமான புவிசார் அரசியல் பிரச்சினைகளில் இந்தியாவும் கனடாவும் பகிர்ந்து கொண்ட பொதுவான ஒத்துழைப்பையும் இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.
அத்துடன் காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோயின் பொருளாதார தாக்கங்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடரவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
தலைவர்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் பல்வேறு முக்கியமான சர்வதேச மன்றங்களில் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதுடன் மேலும் பரஸ்பர ரீதியாக அனைத்து பிரச்சினைகள் பற்றிய விவாதங்களையும் நேற்றைய உரையாடலில் இருவரும் மேற்கொண்டனர்.