பாடசாலைகளுக்கு 150க்கும் அதிகமான வெடிகுண்டு மிரட்டல்: கைத்தான சைக்கோ!
அமெரிக்காவில் உள்ள பாடசாலைகளுக்கு 150க்கும் மேற்பட்ட முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பெருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரு நாட்டை சேர்ந்த 33 வயதான நுனெஸ் சேண்டோஸ் என்ற நபர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குறித்த நபர் போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது, குழந்தைகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிப்பது என்று அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நியூயார்க், பென்சில்வேனியா, அரிசோனா, கனெக்டிகட் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு கடந்த 15ம் திகதி முதல் 21ம் திகதி வரை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக அமெரிக்க பொலிஸார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“உங்கள் பாடசாலையில் சில வெடிகுண்டுகளை வைத்துள்ளேன், இன்னும் சில மணித்தியாலத்தில் அவை வெடிக்கும், நீங்கள் இறந்து உங்கள் குடும்பத்தினர் அழுவதைப் பார்த்து நான் சிரிப்பேன்” என்று நுனெஸ் சேண்டோஸ் சமீபத்தில் பாடசாலை ஒன்றுக்கு மிரட்டல் விடுத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனால் 20 பாடசாலைகளில் இருந்து 1000ற்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், பின்னர் அந்த மிரட்டல் வதந்தி எனத் தெரியவந்தது.
பாடசாலைகள் மட்டும் இல்லாமல் மருத்துவமனை, தேவாலயம் ஆகிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து முறைப்பாடு எழுந்ததை அடுத்து, அமெரிக்க பொலிஸின் வேண்டுகோளுக்கு இணங்க பெரு பொலிஸார் நுனெஸ் சேண்டோஸை தலைநகர் லிமாவில் கைது செய்துள்ளனர்.