ஒன்ராறியோ மாகாணத்தில் 10 மாத குழந்தையை காப்பாற்ற தாயாரின் துணிச்சலான செயல்!
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்க, தாயார் ஒருவர் தமது 10 மாத குழந்தையை காப்பாற்ற மேற்கொண்ட துணிச்சல் பலராலும் பாராட்டப்படுகிறது.
ஒன்ராறியோ மாகாணத்தின் Etobicoke பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்று புதன்கிழமை பகல் திடீரென்று தீ விபத்தில் சிக்கியுள்ளது. இதில், Tamara Harris என்ற தாயார் தமது 10 மாத குழந்தையுடன் குறித்த குடியிருப்பில் சிக்கிக்கொண்டுள்ளார்.
கரும்புகை அவரது வீட்டுக்குள் சூழ, அந்த தாயார் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளார். உடனடியாக முடிவெடுத்த அவர், ஜன்னலை உடைத்து தமது பிள்ளையை வெளியே இருப்பவர்களிடம் கைமாற முடிவு செய்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை, காப்பாற்றப்பட்டுள்ளது. ஜன்னலை உடைக்கும் முயற்சியில் அவரது கைகள் காயம்பட்டதுடன், ரத்தம் சொட்டச் சொட்ட தமது பிள்ளையை காப்பாற்றியுள்ளார் Tamara Harris.
காயம் பட்டிருந்தாலும், பிள்ளையை உரிய நேரத்தில் காப்பாற்ற முடிந்ததில் தமக்கு நிம்மதியாக இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தீயணைப்பு வீரர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து தம்மை காப்பாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துரிதமாக செயல்பட்டதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என கூறும் தீயணைப்பு வீரர்கள், ஆனால் இரண்டு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தால் சுமார் 40 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை முகாம்களில் தங்க வைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.